

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதால் விவசாயிகள் விளை நிலங்கள் அருகே வேலிகள் அமைத்துள்ளனர். குறிப்பாக சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செங்கோட்டையை அடுத்த கேரள வனப்பகுதியான எடப்பாளையம் அருகே உள்ள ஆறுமுககடை என்ற பகுதியில் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் இன்று அதிகாலையில் சிறுத்தை சிக்கி கொண்டது.
இதனை பார்த்த அப் பகுதி விவசாயிகள் கேரள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றி காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.