

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது போட்டியில் அயர்லாந்தும், 4வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 5-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அணி கேப்டன் அஷ்கர் ஆப்கன் பொறுப்புடன் ஆடி 82 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக, மொகமது நபி 40 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரரான பால் ஸ்டிரிங் 70 ரன்னும், 3-வதாக இறங்கிய ஆன்டி பால்பிரைனி 68 ரன்கள் அடித்தனர். ஆட்டத்தின் கடைசியில் கெவின் ஓ பிரையன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
அயர்லாந்து 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. #AFGvIRE