

சென்னை:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷபிர் கரிம். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் நெல்லை மாவட்டத்தில் உதவி (பயிற்சி) சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இந்திய ஆட்சித்துறை பணியான ஐ.ஏ.எஸ். வேலையில் சேருவதற்கு ஆசைப்பட்ட ஷபிர் கரிம் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற எழுத்து தேர்வில் கலந்து கொண்டார்.
தேர்வின்போது கேள்வித்தாளில் உள்ள பதில்களை ஐதராபாத்தில் இருந்து செல்போன் வழியாக அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் ஒவ்வொன்றாக படித்து கூறினார். இதை காதில் மாட்டியிருந்த ‘புளூ டூத்’ வழியாக கேட்டபடி ஷபிர் கரிம் தேர்வை எழுதியுள்ளார்.
இதை கவனித்துவிட்ட தேர்வுத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவரை கைது செய்தனர். அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஐதராபாத் நகர் போலீசார் துணையுடன் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாய்ஸ் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி ஜாய்ஸ் தாக்கல் செய்த மனு எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. குழந்தையுடன் சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.