குழந்தைகளை காண முன்னாள் மனைவி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரி

கர்நாடகாவில் தனது குழந்தைகளை காண அனுமதிக்க கோரி முன்னாள் மனைவி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரியால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
அருண் ரங்கராஜன்
அருண் ரங்கராஜன்
Published on

பெங்களூரு:

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தின் உள் பாதுகாப்பு பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் அருண் ரங்கராஜன். இவரது மனைவி இலக்கியா கருணாகரன். இவரும் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இருவரும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் போது சந்தித்து திருமணம் செய்துகொண்டனர். 

பின்னர் கர்நாடகா மாநிலத்திற்கு பணிமாற்றம் செய்துகொண்டனர்.  கர்நாடகாவிற்கு இடம் பெயர்ந்த பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் தனது குழந்தைகளை காண அனுமதிக்க கோரி இலக்கியா வீட்டின் முன்பு அருண் நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து இலக்கியா, அருண் தன்னிடம்  தகராறில் ஈடுபடுவதாக போலீசிற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருணை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லவில்லை. நான் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. 

எந்த விதிமுறையின் அடிப்படையில் என்னை நீங்கள் இங்கிருந்து வெளியேற சொல்கிறீர்கள் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். சிறிது நேர விவாதத்திற்கு பிறகு அருண் அவரது குழந்தைகளை காண அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவ்விடத்தை விட்டுச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com