

சென்னை:
சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் ‘புளூடூத்’ மூலமாக காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக அவரது மனைவி ஜாய்ஸ், நண்பர் ஐதராபாத் டாக்டர் ராம்பாபு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாய்ஸ் தனது ஒரு வயது குழந்தையுடன் சிறைக்கு சென்றதால் அவருக்கு மட்டும் எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கியது.
ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம், டாக்டர் ராம்பாபு ஆகியோருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று எழும்பூர் 14-வது பெருநகர குற்றவியல் நடுவர் ரோஸ்லின் துரை முன்பு நடந்தது. அரசு வக்கீல் ஆர்.கொளஞ்சிநாதன், வழக்கு ஆரம்பகட்ட விசாரணையில் உள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதனை ஏற்று குற்றவியல் நடுவர் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.