

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) ஆகியோரின் சிறந்த பேட்டிங்கால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர்.
லோகேஷ் ராகுல் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாஹர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த அவர், ஹர்பஜன் சிங் வீசிய 2-வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசினார். அதோடு மட்டுமல்லாமல், சாஹர் வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.
4-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்தார். ஹர்பஜன் சிங் இந்த ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் கெய்ல் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் அடித்தார். அணியின் ஸ்கோர் 10.3 ஓவரில் 108 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஹர்பஜன் சிங் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தில் லோகேஷ் ராகுலும், 4-வது பந்தில் கிறிஸ் கெய்லும் ஆட்டமிழந்தனர்.