

மும்பை:
நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’’ அணியின் உரிமையாளராக இருக்கிறார். இதில் அவரது மனைவி கவுரிகான், நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அன்னிய செலாவணி விதிமீறல் நடந்து இருப்பதாக அமலாக்கப் பிரிவு விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஷாருக்கான், கவுரி கான், ஜூகி சாவ்லா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் அன்னியச் செலாவணி விதி மீறல் தொடர்பாக ஷாருக்கான், கவுரிகான் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
அதில் வருகிற ஆகஸ்ட் 23-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூகி சாவ்லா மீதான புகார் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஷாருக்கான் கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி தனது பட விளம்பரத்துக்காக மும்பையில் இருந்து வதோதரா வழியாக டெல்லிக்கு ரெயில் பயணம் மேற்கொண்டார். அப்போது வதோதரா ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரீத் கான் பதான் என்பவர் இறந்தார்.
இது தொடர்பாக ஷாருக்கான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திரா சோலங்கி போலீசில் புகார் மனு கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் வதோ தரா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து ஷாருக்கான் தரப்பில் குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். மனுவை நீதிபதி விசாரித்து ஷாருக்கான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.