பாக். முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய இன்டர்போல் போலீஸ் மறுப்பு

தேசத்துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு துபாயில் தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுத்துள்ளது. #Interpolrejected #Musharrafarrest
பாக். முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய இன்டர்போல் போலீஸ் மறுப்பு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

இதையடுத்து, வெளிநாட்டுக்கு சென்ற அவர் தற்போது துபாயில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டில் தேவை இல்லாமல் நெருக்கடிநிலை சட்டத்தை அமல்படுத்திய தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு பாகிஸ்தன் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், 20-ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்படாததால் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சக செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைத்தது.

இதைதொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான உள்துறை செயலாளர், முஷரப்பை கைது செய்ய முடியாது என இன்டர்போல் போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டதாக குறிப்பிட்டார். 

உள்நாட்டு அரசியல் தொடர்புடைய தேசத்துரோகம் போன்ற வழக்குகளில் தேடப்படும் நபரை கைது செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என இன்டர்போல்  சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு வந்தால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும், துபாயில் இருந்து விமானத்தில் வருவதற்கு அவரது உடல்நிலை சரியில்லாததாலும் இவ்வழக்கு விசாரணையில் முஷரப் பங்கேற்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் “ஸ்கைப்” மூலம் முஷரப்பிடம் இருந்து வாக்குமூலம் பெற முயற்சிக்காதது ஏன்? என அரசுதரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி யாவர் அலி கேள்வி எழுப்பினார். 

துபாயில் இருக்கும் முஷரப்பிடம் இருந்து  “ஸ்கைப்” மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை செப்டம்பர் மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #Interpolrejected #Musharrafarrest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com