

பீகார் தலைநகர் பாட்னாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஷ்வினி சவுபே இன்று நேரில் சென்று பார்வையிட்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது, வெளியில் நின்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் இருந்து ஒரு நபர் மத்திய மந்திரி அஷ்வினி சவுபே மீது மை வீசினர். இதனால் அவரது ஆடையில் கறை படிந்தது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் சிலர் மீதும் மை விழுந்தது.
இந்த சம்பவத்தினால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மை வீசிய அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி சவுபே, “பொதுமக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயகத்தின் தூண் மீதும் மை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்” என்றார்.