இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி கிரேஸ் பானுவுக்கு இளம் சாதனை திருநங்கை விருது

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் "இளம் சாதனை திருநங்கை -2017" என்ற விருது அளிக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி கிரேஸ் பானுவுக்கு இளம் சாதனை திருநங்கை விருது
Published on

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்திருந்தனர்.

இதையொட்டி திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்காக நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி கடந்த 8-ம் தேதி காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவி மோகனா தலைமை தாங்கினார்.

துணைத்தலைவி நூரி, செயலாளர் கங்கா, விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் இணை செயலாளர் சுபிக்‌ஷா வரவேற்றார்.


இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 47 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் முடிவில் சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார். சேலத்தை சேர்ந்த கவி 2-ம் இடத்தையும், மதுரையை சேர்ந்த வர்னிதா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த கவி, 3-ம் இடத்தை பிடித்த வர்னிதா ஆகியோருக்கும் கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில், திருநங்கையர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திருநங்கை கிரேஸ் பானுவுக்கு சிறப்பு கவுரவப் பட்டமும் அளிக்கப்பட்டது.

இந்த அசுர சாதனையை பாராட்டி சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பாக கிரேஸ் பானுவுக்கு "இளம் சாதனை திருநங்கை -2017" என்ற விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள கிரேஸ் பானு தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

இலட்சக்கணக்கான மூத்த திருநங்கைகள் மற்றும் இளைய திருநங்கைகள் முன்னிலையில் எனக்கும் என்னுடைய சமூக செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் "இளம் சாதனை திருநங்கை -2017" என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.


எத்தனையோ அங்கீகாரங்கள் விருதுகள் நமக்கு கிடைத்தாலும் நாம் யாருக்காக போராடுகிறோமோ..? அவர்கள் நம்மை அங்கீகரிக்கும் மனம் யாருக்கும் வராது என் சமூகமே என்னை ஊக்குவித்து இந்த விருதை வழங்கியது மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன்.

என் திருநங்கை சமூகமே என்னை தொடர்ந்து இயக்குகிறது அவர்களே என்னை ஊக்குவிக்கும் பாக்யம் பெற்றேன். என்னை பரிந்துரைத்த தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பை சார்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

இன்றைக்கு இளைய தலைமுறை உரிமைகளுக்காக போராடுகிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் பல மூத்த திருநங்கைகள் அடி, உதைகள் வாங்கி இரத்தம் சிந்தி இளைய சமுதாயத்தை சுதந்திர காற்றை சுவாசிக்க உறுதுணையாக இருந்துள்ளனர்.

அவர்களுக்கும் பல்வேறு தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆட்பட்டு, ஒடுக்கதலை அனுபவித்து உயிர் நீத்த என் மூத்த திருநங்கைகளுக்கு இந்த விருதினை சமர்பிக்கிறேன்.

சமுதாயத்தை உயர்த்தி அனைத்து துறைகளிலும் சாதித்து நீங்கள் கண்ட கனவுகளை நனவாக்கி அந்த வெற்றிகளை எங்கள் மூத்த திருநங்கைகளின் பாதத்தில் நிச்சயம் சமர்பிப்போம். என் அத்தனை முயற்சியிலும் என்னுடன் துணை நிற்கும் அத்தனை தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிரேஸ் பானு, தனது அடையாளத்தை வெளிப்படுத்திய கனமே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆண்கள் உயர்நிலை பள்ளியில் உயர்கல்வி படிப்பை முடித்த நிலையில் உறவினர், நண்பர்களின் ஆதரவு பறிக்கப்பட்ட சூழலில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சி தோல்வியை தழுவியதும் மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

உடல் தொடர்பான மாற்றங்களை வெளிப்படுத்த தொடங்கியதால் மன நோயாளி பட்டம் சூட்டப்பட்ட தனது வனவாச காலம் முடிந்த பின்னர், தனது உடல் மற்றும் மனமாற்றத்துக்கு ஏற்றதொரு சமூகத்திலேயே தொடர்ந்து வாழ நினைத்ததால் மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வந்த கிரேஸ் பானு, தமிழகத்தில் இயங்கி வரும் ஒரு திருநங்கை சபையில் தஞ்சம் புகுந்தார்.

இழந்ததாய் நினைத்த வாழ்க்கையை மீண்டும் தன் சமூகத்தாருடன் துவங்கிய கிரேஸ் பானு, அந்த சமூகத்தவரில் தன்னை பெற்ற “மகளாக” ஏற்றுகொண்ட ஒரு மூத்த திருநங்கையின் உதவியோடு டிப்ளோமா படிப்பில் 94 சதவிகித மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

டிப்ளோமா முடித்த கையோடு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்த பானுவின் அடையாளம் அலுவலகத்தில் தெரிந்துப்போக, சகப் பணியாளர்களின் ஏளனப் பார்வைக்கும், தீப்பொறி பேச்சுக்கும் தொடர்ந்து இலக்காகி வந்த பானு, ஒரு காலக்கட்டத்தில் அந்த வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட்டது.

பலரிடம் கடன்பெற்று உடல் மாற்றங்களுக்கான அறுவை சிகிச்சை செய்தும் வேலையை பெற முடியாததால், தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தும் நோக்கில் பொறியியல் பட்டதாரியாகும் கனவுடன், பல்வேறு போராட்டங்களை கடந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் தன் சமூகத்தை முன்னிலைப்படுத்திய முதல் திருநங்கை என்ற பெருமிதத்தோடு கிரேஸ் பானு கலந்து கொண்டார்.

இதற்கிடையில், எதிர்கால வாழ்க்கை எனும் இலட்சிய கனவுடன் சமகாலத்தில் தனது இனத்தை சேர்ந்த திருநங்கையர்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு சமூக கொடுமைகளை எதிர்த்தும் இவர் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வந்துள்ளார்.

போலீசாரால் திருநங்கையர்கள் தகாத முறையில் நடத்தப்படும் வேளைகளிலும் உலகின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்டம், நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டம், கருவேலங்காடுகளை அழிக்கும் போராட்டம் என சமீபகாலமாக தமிழ் நாளேடுகளில் இடம்பிடித்த பல்வேறு போராட்டங்களில் இவரது போர்க்குரல் அதிகமாக எதிரொலித்து வந்துள்ளது.

குறிப்பாக, தமிழக அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி திருநங்கையர்களுக்கான இட ஒதுக்கீட்டினை கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகே கிரேஸ் பானு பங்கேற்ற போராட்டமும், இவர் மீது நடத்தப்பட்ட போலீசாரின் அடக்குமுறையும் பலரது கவனத்தை ஈர்த்தது.

டிப்ளோமா படிப்பில் 94 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தபோதும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் அரக்கோணத்தில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் படிக்க கிரேஸ் பானுவுக்கு இடம் கிடைத்தது.

கல்லூரி நிர்வாகம் கிரேஸ் பானுவிற்கு இலவச கல்வி வழங்கிய போதும், தனது அடிப்படை தேவைகளுக்கான செலவினங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை சமாளிக்க போதுமான அளவுக்கு பணம் கிடைக்காமல் பரிதவித்தார்.

இவரது வாழ்க்கைப் போராட்டம் மற்றும் சமூகப் போராட்டத்துக்கு ஆதரவாக திருநங்கை இனத்தவர் மட்டுமின்றி, பல நண்பர்களும், தோழியர்களும் தோள் கொடுத்து வந்துள்ளனர்.

குறிப்பாக, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் இடும் பதிவுகள் உரிய முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பேஸ்புக்கில் இவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com