நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் - அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தமும், டெல்லியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் தலைமையகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் - அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள சுமார் 300 டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை டாக்டர்கள் நிராகரித்து விட்டனர்.

மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் திங்கட்கிழமை வரை தொடரும் என அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், நாளை காலை முதல் 24 மணிநேரம் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், நாளை காலை 10 மணி முதல் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் தலைமையகத்தின் முன்னர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவசரகால சிகிச்சைப்பிரிவு வழக்கம் போல் செயல்படும். புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் நாளை காலை 6 மணிமுதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com