மசூத் அசார் இறந்ததாக வெளியாகும் தகவல் - ஆய்வு செய்து வரும் இந்திய உளவுத்துறை

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் உலவும் தகவலை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #PulwamaAttack #JeM #MasoodAzar #IndianIntelligenceagencies #MasoodAzhardeath
மசூத் அசார் இறந்ததாக வெளியாகும் தகவல் - ஆய்வு செய்து வரும் இந்திய உளவுத்துறை
Published on

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் எங்கு இருக்கிறான்? என்பது பற்றி தங்களிடம் எந்த தகவலும் இல்லை என முன்னர் பாகிஸ்தான் அரசு தெரிவித்து வந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சமீபத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையோரத்தில் இருந்த ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதற்கிடையே, மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதாகவும், வீட்டில் இருந்து வெளியேவர இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டு கிடப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி 1-3-2019 அன்று தெரிவித்தார்.

அதில், அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். வீட்டை விட்டு வெளியேவர முடியாத நிலையில் மிகவும் மோசமான உடல்நிலையில் அவர் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வலிமையான ஆதாரங்களை இந்தியா அளித்தால் அவற்றை வைத்து, எங்கள் நாட்டு மக்கள் மற்றும் நீதித்துறையை நாங்கள் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் இன்று வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் உண்மைதானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த மத்திய உளவுத்துறையின் மூத்த உயரதிகாரி ஒருவர், ‘எங்களிடம் உள்ள கடைசி தகவலின்படி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் மசூத் அசார் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

அவன் இறந்தது தொடர்பாக வெளியாகிவரும் தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வு செய்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #PulwamaAttack #JeM #MasoodAzhar #IndianIntelligenceagencies #MasoodAzhardeath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com