சிறைக்கைதிகளை போல வாழ்கிறோம் - அமீரக அரசிடம் உதவி கோரும் இந்தியர் குடும்பம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர், தான் குடும்பத்துடன் சிறைக்கைதிகளை போல அவதிப்படுவதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறைக்கைதிகளை போல வாழ்கிறோம் - அமீரக அரசிடம் உதவி கோரும் இந்தியர் குடும்பம்
Published on

துபாய்:

கேரளாவை சேர்ந்த மதுசூதனன் கடந்த 1979-ம் ஆண்டு ஷார்ஜா வந்துள்ளார். அங்கு கூலி வேலை செய்த அவர் 1988-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வந்து அங்கு கூலி வேலை செய்த ரோகினி என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்றாண்டுகளில் அவரது பணி அனுமதிக்காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

ஆனால், ஒரு குழந்தை பிறந்து விட்ட நிலையில் குடும்பத்தை பிரிய முடியாது என்பதால் அவர் அங்கேயே சட்டவிரோதமாக தங்க தொடங்கினார். அதன் பிறகு சரியான வேலை கிடைக்காமல் குடும்பத்தை ஓட்டிய அவருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன.

முதல் குழந்தைக்கு மட்டுமே அவரால் பாஸ்போர்ட் பெற முடிந்தது. மதுசூதனன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால், மற்ற குழந்தைகளுக்கு எவ்வித ஆவணமும் பெற முடியவில்லை. பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை.

இதனால், பள்ளி செல்லாமலேயே வளர்ந்த 4 குழந்தைகளுக்கும் அவரது தாயார் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற பல முறை அரசு பொது மன்னிப்பு வழங்கினாலும், தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்பதால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.

மனைவி இலங்கையை சேர்ந்தவர், குழந்தைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை இதனால், அவர் இந்தியாவுக்கும் திரும்ப முடியாது. வெறும் பிரெட் மற்றும் தண்ணீரை குடித்து சிறைக்கைதிகளை போல தங்களது வாழ்க்கை நடந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள மதுசூதனன், அமீரக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com