தெரிந்தே மெஹுல் சோஸ்கியை தப்பிக்க வைத்ததா பிரதமர் அலுவலகம்? பரபரப்பு தகவல்

வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மெஹுல் சோஸ்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக்கொண்டதாக ஆண்டிகுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #MehulChoksi #PNBScam
தெரிந்தே மெஹுல் சோஸ்கியை தப்பிக்க வைத்ததா பிரதமர் அலுவலகம்? பரபரப்பு தகவல்
Published on

புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

இந்நிலையில், மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களை டெய்லி அப்சர்வர் என்ற அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

2018 ஏப்ரலில் ஆண்டிகுவா பிரதமரை சந்தித்த மோடி

அதாவது, இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிஎன்பி மோசடி குறித்த புகார் சிபிஐ.யில் அளிக்கப்படுகிறது. ஆனால், 4-ம் தேதியே மெஹுல் சோஸ்கி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15-ம் தேதி ஆண்டிகுவா நாட்டின் குடிமகனாக அவர் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மெஹுல் சோஸ்கிக்கான குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மெஹுல் சோஸ்கி மற்றும் அவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பெங்களூரை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு விரிவான புகார் அளித்துள்ளார். 

ஹரி பிரசாத் புகார் அளித்த மூன்று மாதங்கள் கழித்து மெஹுல் சோஸ்கிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் சோஸ்கி ஆண்டிகுவா சென்று பாஸ்போர் வரை பெற்ற பின்னரே வெளியே கசிய தொடங்கியது.

ஆண்டிகுவாவில் சோஸ்கி குடியேறினாலும், அவர் மீது பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com