

ஐதராபாத்:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆடியது. எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அதன்பிறகு சற்று நிமிர்ந்தது. ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டவ்ரிச் 30 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 52 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்னுடனும், பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சேஸ், சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பிஷூ 2 ரன்களிலும், கேப்ரியேல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், பிருத்வி ஷா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன் சேர்த்து வருகின்றனர். #INDvWI