

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி இந்தியாவை படுதோல்வியடையச் செய்தார்.
அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 553 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இன்னும் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
3-வது டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு இதுவரை ஆண்டர்சன் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி என்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.