

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் சசிகலா, நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனையைத் தொடங்கினர்.
ஜெயா டி.வி. அலுவலகத்திலும் 9-ம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ஜெயா டிவி பொது மேலாளரின் லாக்கரைத் திறந்தும் சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்து பல்வேறு தகவல்களை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. பல்வேறு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.