

மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்னக்காம்பட்டி காலனியில் சுமார் 50 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் தேவைக்காக 2 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பகுதிக்கு குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குளத்துப்பாளையம் மின் பகிர்மான அலுவலகத்தில் இருந்து கடைக்கோடி பகுதியான இந்த காலனிக்கு மின் வினியோகம் சரியாக இருப்பதில்லை. பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு 220வோல்ட் மின் வினியோகம் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கே அனேக நேரங்களில் 120 - வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றது. மின் மோட்டார்கள் இயங்குவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.
மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் விசிறி, அயன் பாக்ஸ், மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் வேலை செய்வதில்லை.
மேலும் இந்த பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எனவே மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கொளத்துப்பாளையம் மின்பகிர்மான அலுவலகம் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் இதுகுறித்து கொளத்துப்பாளையம் மின்பகிர்மான அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடிக்குமானால் இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.