மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து - மேலும் ஒரு சடலம் கண்டுபிடிப்பு

மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் மேலும் ஒரு சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து -  மேலும் ஒரு சடலம் கண்டுபிடிப்பு
Published on

ஷில்லாங்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

இதனையடுத்து 150 அடி ஆழத்தில் ஒரு எலும்புக் கூடு மீட்கப்பட்டது. 370 அடி ஆழத்தில் மற்றொரு சடலம் கடந்த மாதம் மீட்கப்பட்டது. இதேபோல் நேற்று மேலும் ஒரு சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் அழுகி எலும்புக்கூடாக கிடந்துள்ளது. அதனை வெளியே கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறது. மேலும் இவ்வழக்கு இன்று  விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com