நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சஸ்பெண்ட் - அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் ராஜினாமா

நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி நாடாளுமன்றத்தின் தீர்மானத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். இந்நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் பிமலேந்திர நிதி ராஜினாமா செய்துள்ளார்.
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சஸ்பெண்ட் - அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் ராஜினாமா
Published on

நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நேபாள காவல் துறைத் தலைவரின் பதவி உயர்வு விவகாரம் அந்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பான விசாரணையில் அப்பதவிக்கான தகுதிகள் குறித்து சர்ச்சை எழுந்தது. இது அதிகாரிகள் மற்றும் அரசு வட்டத்தில் அதிருப்தியை எழுப்பியது.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி மீது அரசு கடும் விமர்சனங்களை முன்வைத்தது. தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்றம் மற்றும் அதிகாரிகள் வரம்பில் தலைமை நீதிபதி தலையிடுவதாகவும் தனது தீர்ப்புகளில் பாரபட்சம் காட்டுவதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 249 எம்.பி.க்கள் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்நாட்டு அரசியல் சாசனத்தின் கீழ், தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கிக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துணைப் பிரதமரும் உள்துறை மந்திரியுமான பிமலேந்திர நிதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியின் தலைவரும் மற்றொரு துணை பிரதமருமான கமல் தாப்பா-வும் இவ்விவாகரத்தில் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com