ரூ.1640 கோடி மோசடி - பெங்களூரு நகைக்கடை அதிபருக்கு 23-ம் தேதி வரை விசாரணை காவல்

பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி 1640 கோடி ரூபாய் மோசடி செய்த மன்சூர் கான் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார்.
மன்சூர் கான்
மன்சூர் கான்
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி 1640 கோடி ரூபாய் மோசடி செய்த மன்சூர் கான் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி வந்தவர் முஹம்மது மன்சூர் கான். இவர் கர்நாடகம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்தார். இவரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினார்கள். இப்படி சுமார் 1,640 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த மன்சூர் கான் பின்னர் துபாய்க்கு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். துபாயில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுவது தெரியவந்தது.

இது தொடர்பாக லுக்அவுட் நோட்டீசை மத்திய அமலாக்க துறையினர் பிறப்பித்து இருந்தனர். துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த மன்சூர் கானை பொருளாதார அமலாக்க துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் டெல்லியில் நேற்று கைது செய்தனர். 

ஏற்கனவே பெங்களூருவில் உள்ள மன்சூர் கானின் சொத்துக்களை கர்நாடக சிறப்பு புலனாய்வு போலீசார் முடக்கி வைத்து உள்ளனர். மன்சூர்கானிடம் விசாரணை நடத்திய பிறகு அவரது சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட மன்சூர் கான் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அமலாக்கத்துறை சிறப்பு நீதி மன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 23-ம் தேதி காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com