ஐஜி பொன்மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு

தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். #IGPonManickavel #PonManickavel
ஐஜி பொன்மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு
Published on

போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிந்தன. அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார். அவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.

அதே நேரத்தில் தமிழக அரசு, சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அவர் அரசிடம் சரியாக தெரிவிப்பது இல்லை என்று குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அவர் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் கோர்ட்டு தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. இதனால் 2 பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

தமிழக போலீசில் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதிலும் திறமையாக செயல்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது நாளை தெரியும்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

ரெயில்வேயில் வழிப்பறியில் ஈடுபட்டால் 14 ஆண்டு வரையில் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. சாட்சிகள் இல்லாத நிலையில் குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் வாங்கினாலே செல்லுபடியாகும், அதனை யாரும் செய்வது இல்லை. கீழ்நிலை காவலர்களுக்கு அது சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

குற்றவாளிகளுக்கு எதிராக 9 எம்.எம். துப்பாக்கியை காட்டுவதை விட போலீசார் தங்களது செல்போனில் அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்வது நல்லது. நல்லது, கெட்டது இரண்டையும் ஏற்கும் மனநிலைக்கு போலீசார் வரவேண்டும். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்.ஐ.ஆர். போடுவதற்கு பயப்படக் கூடாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com