26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு

இடுக்கி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அணையை திறக்க வாய்ப்புள்ளதாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IdukkiDam
26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

பலத்த மழை காரணமாக கேரளாவின் அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. கேரளாவில் நீர் மின்சார திட்டத்திற்கு பயன்படும் இடுக்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

2,403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் நேற்று 2,395 அடி தண்ணீர் உள்ளது. இன்னும் 8 அடி தண்ணீர் வந்தால் அணை முழு கொள்ளளவை எட்டும்.

இடுக்கி அணை திறந்து விடப்பட்டால் பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் திருச்சூர், ஆலுவா மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென்று கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த பகுதிகளில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அணையை திறக்க வாய்ப்புள்ளதாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதில்லை. இதனால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதில்லை. இப்போது அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையை திறக்கும் வாய்ப்பு உள்ளது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இடுக்கி அணையையொட்டி உள்ள செறுதோணி அணையிலும் அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

24 மணி நேரமும் அங்கு போலீசாரும், அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #IdukkiDam

X

Maalai Malar
www.maalaimalar.com