தொழில் அதிபர் ரன்வீர் ஷா-கிரண் ராவை 15 நாள் காவலில் எடுக்க முடிவு: ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல்

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை 15 நாட்கள் காவலில் எடுக்க முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Idoltheftcase #RanvirShah #KiranRao #HighCourt
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண் ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண் ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ரன்வீர் ஷா, கிரண் ராவ் இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் உடனடியாக முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனை தெரிவித்த நீதிபதி 2 பேரின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் பற்றிய விவரங்களை வருகிற 23-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரையில் முன் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிலைகளை தனியார் நிறுவனத்திடம் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தனர். இதனை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. புராதன சிலைகளை விற்பனை செய்ய எந்த தனியார் நிறுவனத்துக்கும், அமைப்புக்கும் அனுமதி இல்லை. அப்படி விற்றால் அது சட்ட விரோதம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ரன்வீர்ஷா, கிரண் ராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தீனதயாளன் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #Idoltheftcase #RanvirShah #KiranRao  #HighCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com