ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்படும் எனவும் புகழ்பெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் முடிவை ஐ.சி.சி. திடீரென கைவிட்டுள்ளது. #ICC #WorldT20 #ChampionsTrophy
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து
Published on

கொல்கத்தா:

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இனி நடத்தப்படாது, அது ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.சி. நேற்று அதிரடியாக அறிவித்தது. கொல்கத்தாவில் 5 நாட்கள் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

9-வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக இப்போது 2021-ம் ஆண்டில் 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு உலககோப்பை அரங்கேறுகிறது.

ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் நிருபர்களிடம் கூறுகையில், ‘2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பதிலாக 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது என்பது ஒருமித்தமாக எடுக்கப்பட்ட முடிவு. இந்த மாற்றத்துக்கு இந்தியாவும் முழு ஆதரவு தெரிவித்தது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 50 ஓவர் உலக கோப்பை போட்டி போன்றே இருக்கிறது. இரண்டையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினமாக இருக்கிறது. 50 ஓவர் வடிவிலான போட்டிக்கு ஒரு உலக கோப்பை இருக்கும் போது சாம்பியன்ஸ் கோப்பை தேவையா?

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். இப்போது 12 டெஸ்ட் அணிகள் இருப்பதை மறந்து விடக்கூடாது.

ஐ.சி.சி.யில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் 20 ஓவர் போட்டிக்கான சர்வதேச கிரிக்கெட் அந்தஸ்து (இருபாலர் அணிக்கும் சேர்த்து) வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (50 ஓவர்) அட்டவணைக்கு ஐ.சி.சி. போர்டு ஒப்புதல் அளித்து அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. ஏற்கனவே வெளியான அட்டவணையில் எந்த வித மாற்றமும் இல்லை.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும் 9-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 16-ந்தேதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.  #ICC #WorldT20 #ChampionsTrophy #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com