ராகுல் பாதுகாப்பில் குளறுபடி- விளக்கம் கேட்டது மத்திய உளவுத்துறை

ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். #KarunanidhiFuneral #RahulGandhi
ராகுல் பாதுகாப்பில் குளறுபடி- விளக்கம் கேட்டது மத்திய உளவுத்துறை
Published on

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 8-ந் தேதி சென்னை வந்தார்.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. கலைவாணர் அரங்கம் பகுதி வழியாக முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடி வரும் வரையிலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட ஏரியாவாகவே காணப்பட்டது. அதன் பின்னர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தி.மு.க.வினரும், பொது மக்களும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியிலும் நுழைந்து விட்டனர்.

இதனால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தியால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு எளிதாக செல்ல முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே இடிபாடுகளுக்குள் சிக்கி ராகுல் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.

ராகுல்காந்தி செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் யார்? யார்? எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது? என்பது போன்ற கேள்விகளை மத்திய உளவு பிரிவினரும், ராகுல் பாதுகாப்பு அதிகாரிகளும் கேட்டுள்ளனர்.

இசட்பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அது எதுவும் ராகுல் பாதுகாப்பில் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசுக்கு உளவு பிரிவு அதிகாரிகள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே ராகுல் பாதுகாப்பில் 3 துணை போலீஸ் கமி‌ஷனர்கள் கோட்டை விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com