விமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா? பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி

விமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பிரிட்டன் அரசின் திட்டத்திற்கு எதிராக இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழும வழக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஏஜி தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ்
ஐஏஜி தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ்
Published on

லண்டன்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு, விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். வேலையிழப்பு அதிகரித்து வருவதால், விமான நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது.

தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாடுகளும் சூழ்நிலை மற்றும் கள நிலவரங்களுக்கு ஏற்ப விமான சேவைகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன.

அவ்வகையில், வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தடுமாற்றத்தில் உள்ள விமான நிறுவனங்கள், இந்த புதிய அறிவிப்பினால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில், அரசின் தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக, வழக்கு தொடர்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (ஐஏஜி) தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார். இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

‘விமான தொழில் மிகவும் கடினமான சவாலை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் கடந்த மாதம் 485 பயணிகள் விமானங்களை மட்டுமே இயக்கியது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com