

மதுரை:
திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி யூனியனில் ரூ.7 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது நிருபர்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சரியான இடமாக உள்ளது. இங்கு மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டனர்.
அதற்கு அமைச்சர் உதயகுமார், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகத்தான் பதவியில் இருக்கிறேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாதபட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
அப்போது அருகில் இருந்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் நானும் ராஜினாமா செய்ய தயார். மாவட்டத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வலியுறுத்துவேன் என்றார்.