குடும்பம் நடத்த இடையூறாக இருப்பதாக கருதி குழந்தையை கொன்ற பெண் கணவருடன் கைது

குடும்பம் நடத்த இடையூறாக இருந்ததாக நினைத்து பெற்ற குழந்தையை தாயே கணவருடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பம் நடத்த இடையூறாக இருப்பதாக கருதி குழந்தையை கொன்ற பெண் கணவருடன் கைது
Published on

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 26). சரக்கு வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினியும்(19) காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியுடன் திவாகரன் நெருங்கி பழகியுள்ளார்.

இதனால் சுபாஷினி கர்ப்பம் அடையவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவாகரனை வலியுறுத்தி உள்ளார். திருமணம் செய்ய மறுக்கவே பிரச்சினை வெடித்தது.

இது குறித்து சுபாஷினி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரனை சிறையில் அடைத்தனர்.

கர்ப்பமாக இருந்த சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த திவாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் சுபாஷினியுடன் நெருங்கி பழகினார். தான் செய்த தவறை திருத்தி கொள்வதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடந்த 5 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இருக்கன்குடி போலீசில் நிலையத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த பின்னர் திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சுபாஷினியுடன் அடிக்கடி தகராறு செய்தார். இந்த நிலையில் நேற்று காலை குழந்தையின் கண், மூக்கில் மிளகாய் பொடி தூவப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தது.

தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திவாகரன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர் தான் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு திவாகரனை பிடித்தனர்.

இதை தொடர்ந்து திவாகரன், சுபாஷினி இருவரையும் போலீசில் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சுபாஷினியே குழந்தையே கொலை செய்தது தெரியவந்தது. என் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை தனக்கு பிறக்கவில்லை. என கூறி பிரச்சினை செய்து வந்தார்.

குடும்பம் நடத்த குழந்தை தானே பிரச்சினை என கருதி குழந்தையை கொலை செய்தேன். இதற்கு உடந்தையாக கணவரும் இருந்ததாக சுபாஷினி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் கணவன்-மனைவியை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com