

கோவை:
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர் பாளையம் அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் பரிந்தர்நாத்(72). இவர் அங்கு தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் பெங்களூரில் உள்ளார்.
கடந்த 21-ந் தேதி பரிந்தர்நாத் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த செயின், கம்மல், வளையல் உள்பட 13 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தன. இவர்கள் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.