சென்னையில் இருந்து வந்ததாக கூறியதால் தகராறு: வீடு சேதம்- 8 பேர் மீது வழக்கு

சென்னையில் இருந்து வந்ததாக கூறியதால் ஏற்பட்ட தகராறில் வீட்டை சேதப்படுத்திய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள தொன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது 37). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அவர் வந்தார்.

இந்நிலையில் அவர் சென்னையில் இருந்து வந்ததாக தொன்னங்குடி கிராமத்தை சேர்ந்த துரைமாணிக்கம் என்பவர் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பையா, துரைமாணிக்கத்திடம், ஏன் வீண் வதந்தி பரப்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த துரைமாணிக்கத்தின் மைத்துனர் முத்துக்குமார், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து கருப்பையா வீட்டை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பையா வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி ரோகிணி கொடுத்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்(29), பாண்டிதுரை(47), ராமநாதன்(40), மற்றொரு ராமநாதன்(35), ஜீவா(32) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய துரைமாணிக்கம், முத்துகுமார், குணசேகரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com