பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து சாகும் வரை காத்திருந்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதே ஆன தன் மகளுக்கு விஷம் அளித்துவிட்டு, அவர் சாவதற்காக அருகிலேயே காத்திருந்த கொடூர மனம் கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து சாகும் வரை காத்திருந்த தந்தை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று சுக்ரதால். இங்கு அமைந்துள்ள ஒரு சுடுகாட்டின் வெற்றிட பகுதியில் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று மாலை அந்த குழுவினர் அப்பகுதிக்கு வந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருக்க, அருகே ஒரு நபர் நிற்பதை கண்டனர்.

இவர்களை பார்த்ததும், அந்த சிறுமியும் இவர்களை சைகை மூலம் அழைக்க அப்பகுதிக்கு விரைந்த இளைஞர்களிடம், தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் சிறுமி தனது மரண தருவாயில் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்ட, அங்கிருந்த அவரது தந்தை தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் தானு என்பதும், அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த விசாரணையிலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக தானு தெரிவித்துள்ளார். அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் வேறுவழியின்றி தனது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து, அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுந்தர் சிங்குக்கு தற்போது நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

பெற்ற பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும் முழு அதிகாரம் கொண்ட பெற்றோர்களே, சிறு சிறு தவறுகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனைகளை வழங்குவது சரியான தீர்வாக அமையாது என்பதை அனைவரும் உணரவே வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com