

ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தின் அருகே தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டனர். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கொண்டு வந்த ஹாங்காங் தலைமை நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.