

புதுடெல்லி:
மத்திய ஆயுதப்படை போலீஸ், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, சஷாஸ்திரா சீமாபால் (இந்திய-நேபாளம், இந்திய-பூடான் எல்லை பாதுகாப்பு படை), இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை துணை ராணுவ படைகள் ஆகும்.
இவற்றில், பெண்களுக்கு மத்திய ஆயுதப்படை போலீஸ், மத்திய தொழிற்பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீதமும், மற்ற படைகளில் 14-15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விரும்புகிறது.
இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
துணை ராணுவ படைகளில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் குழுவின் 6-வது அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்தான் துணை ராணுவ படைகளில் மேலும் பெண்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.