

கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்துக்கு எதிராக போராடியவர் இரோம் சர்மிளா. இவர் கடந்த முறை அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கூறி கடந்த 2 மாதமாக கொடைக்கானலில் வசித்து வருகிறார்.
அவரும் லண்டனைச் சேர்ந்த தேஸ்மந் கொட்டின்கோவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக தங்களது திருமணத்தை பதிவு செய்யுமாறு கொடைக்கானல் சார் பதிவாளரிடம் மனு அளித்தனர். இவர்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்க கூடாது என்று கொடைக்கானல் தே.மு.தி.க. பிரமுகர் சார் பதிவாளரிடம் மனு அளித்து அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று இந்துமக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் கொடைக்கானல் டி.எஸ்.பி செல்வத்திடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் இரோம் சர்மிளா திருமணத்தை கொடைக்கானலில் நடத்த அனுமதி வழங்க கூடாது. அவர் பழங்குடியின மக்களுக்காக போராட போவதாக அறிவித்துள்ளார்.
அவரது திருமணம் நடந்து முடிந்தால் கொடைக்கானலிலேயே தங்கி விடுவார். அமைதியான சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதே மனுவை கொடைக்கானல் சார் பதிவாளர் ராஜேசிடமும் அளித்துள்ளார்.