இமாச்சலபிரதேசத்தில் 9-ந்தேதி ஓட்டுப்பதிவு: குற்ற வழக்கில் சிக்கிய 61 பேர் தேர்தலில் போட்டி

இமாச்சலபிரதேசத்தில் வருகிற 9-ந்தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் குற்ற வழக்கில் சிக்கிய 61 பேர் போட்டியிடுகின்றனர்.
இமாச்சலபிரதேசத்தில் 9-ந்தேதி ஓட்டுப்பதிவு: குற்ற வழக்கில் சிக்கிய 61 பேர் தேர்தலில் போட்டி
Published on

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இமாச்சல பிரதேசத்தில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் வேட்பாளர்களை நிறுத்தி மோதுகின்றன. மொத்தம் 338 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் 158 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.07 கோடியாகும். காங்கிரசில் 59 பேரும், பா.ஜனதாவில் 47 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்கள்.

112 சுயேச்சைகளில் 36 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.56 கோடி, பா.ஜனதா வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.31 கோடி. பா.ஜனதா வேட்பாளர் பல்வீர்சிங்கிடம் அதிகபட்சமாக ரூ.90 கோடி சொத்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யாவிடம் ரூ.84 கோடி சொத்து உள்ளது.

முதல்-மந்திரி வீரபத்ரசிங் உள்பட 5 பேர் தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடி என்று தெரிவித்துள்ளனர். 71 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

மேலும் இங்கு போட்டியிடும் 338 வேட்பாளர்களில் 61 பேர் குற்றப்பின்னணி உடையவர்கள். அவர்களில் 31 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பா.ஜனதாவைச் சேர்ந்த 23 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 10 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 3 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com