

அமெரிக்காவின் முன்னாள் மந்திரியும், அந்நாட்டு முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன், கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் அவரது கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று வென்றார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடைந்த காரணத்தையும், அதிபர் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற காரணத்தையும் ஹிலாரி கிளிண்டன் ஒரு புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக மூன்று நாள் சுற்றுப் பயணமாக கடந்த வாரம் ஹிலாரி இந்தியா வந்தார். அவரது பயணம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹிலாரி தங்கியிருந்தார். அப்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்த அவருக்கு கையில் வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹிலாரியின் கையில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்பின்னர் அவர் சில நிகழ்ச்சிகளை மட்டும் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.