

புதுடெல்லி:
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 3 மணி 20 நிமிடம் ஆகும். அதிகபட்சமாக சில ரெயில்களின் பயண நேரம் 5 மணி 20 நிமிடம் ஆகும்.
இந்த நிலையில் சண்டிகார்-டெல்லி இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரெயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரெயில் 200 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல கூடியது. ஆனால், ரெயில் தண்டவாளத்தின் தன்மை காரணமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இயக்கப்பட உள்ளது.
அதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் விரைவில் இயக்கப்படுகிறது. கபூர்தலாவில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்.சி.எப்.) இந்த ரெயிலை வருகிற 15-ந்தேதி வடக்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கிறது.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் 19 பெட்டிகளை கொண்டது. ஒரு பெட்டியின் விலை ரூ.3.25 கோடியாகும். இதை தயாரிக்க 6 மாதம் ஆனது. இந்த ரெயிலில் 19 ஏ.சி. வசதியுடன் கூடிய சேர் கார்கள் இருக்கும்.
வைபை, எல்.சி.டி. டி.வி. செல்போன் சார்ஜர், பையோ-டாய்லெட் உள்பட பல்வேறு நவீன வசதிகளும் இந்த ரெயிலில் இருக்கும்.
முதலில் இந்த அதிவேக ரெயில் மும்பை-கோவா வழித்தடத்தில் இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போது வடக்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டதாக பொது மேலாளர் தெரிவித்தார்.