ரெயில் பெட்டிகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை - ரெயில்வே நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

உயர் அதிகாரிகளின் அறைகளை போன்று ரெயில் பெட்டிகளையும், ரெயில் நிலையங்களையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ரெயில்வே நிர்வாகம் 12 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. #HighCourt #Train
ரெயில் பெட்டிகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை - ரெயில்வே நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

ரெயில்களில் குளிர் சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, தலையணை உறை, படுக்கை விரிப்பு ஆகியவற்றை துவைக்கும் ஒப்பந்த பணியை ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரிதான் என்றும், புதிய அறிவிப்பை வெளியிட்டு, காலதாமதம் இல்லாமல், ஒப்பந்த பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், ரெயில்களில் அசுத்தம் இருப்பதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் எல்லாம் மிகவும் சுத்தமாகவும், நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. அதுபோல, பணம் தரும் பயணிகளுக்கு, குறைந்தபட்சம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் ரெயில் பயணத்தின்போது வழங்கவேண்டும்.

பயணிகள் தரும் பணத்தை கொண்டுதான், அதிகாரிகளுக்கு சம்பளம் தரப்படுகிறது. அந்த பணத்தை கொண்டுதான் ரெயில்வே துறையும் இயங்குகிறது. எனவே, அசுத்தம் குறித்து பயணிகள் செய்யும் புகாருக்கு மதிப்பு அளிக்கவேண்டும். தங்களது பொறுப்பை அதிகாரிகள் தட்டிக்கழிக்க முடியாது.

ஒவ்வொரு பயணிகளும் சுத்தமான சூழ்நிலையில் பயணத்தை மேற்கொள்ள உரிமை உள்ளது. அசுத்தம் குறித்து புகார் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. குறைந்தபட்சம் இந்திய ரெயில்வே துறை நிர்ணயம் செய்துள்ள தரத்துக்காவது ரெயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பராமரிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கப்படும், படுக்கை விரிப்பு முறையாக துவைக்கப்படுவது இல்லை. பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணையில் இருந்தும், படுக்கை விரிப்பில் இருந்தும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுமட்டுமல்ல, ரெயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சியும், எலியும் ஓடுவதால், இரவு முழுவதும் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்கின்றனர். இந்த குறைபாடுகள் குறித்து பயணிகள் புகார் செய்தால், அதற்கு ரெயில்வே ஊழியர்கள் மதிப்பு அளித்து முறையாக பரிசீலிப்பதும் இல்லை.

இந்த குறைபாடுகள் எல்லாம் பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். அதேபோல பல ஆண்டுகளாக, இதுகுறித்து ரெயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே, அதிகாரிகளும், ஊழியர்களும் பயணிகள் தெரிவிக்கும் புகாரை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

ரெயில் பயணிகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அதுகுறித்து இந்த ஐகோர்ட்டு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ரெயில்வே துறையில் பல தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்காக போராடுகின்றன. அதேநேரம், அந்த தொழிற்சங்கம், தங்களது உறுப்பினர்களான ரெயில்வே ஊழியர்கள், தங்களது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்கின்றனரா? என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

எனவே, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்களையும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்பட வேண்டும். அந்த பணிகளை செய்யும் அதிகாரி யார்? என்பதை நிர்ணயம் செய்து, அந்த அதிகாரியிடம் அந்த பொறுப்பை, ரெயில்வே பொதுமேலாளர் ஒப்படைக்க வேண்டும்.

சுத்தத்தை பராமரிக்காமல், அஜாக்கிரதையுடன், அலட்சியமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ரெயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரெயில் நிலையங்களிலும் உள்ள அசுத்தம் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க பிரத்யேகமாக தொலைபேசி நம்பரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

இந்த தொலைபேசி எண் ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் பொதுமக்களுக்கு தெரியும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும். இந்த உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அதுகுறித்து அறிக்கையை 12 வாரத்துக்குள் ரெயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  #HighCourt #Train

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com