திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. #Jallikattu # Ulagampatti
திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
Published on

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு 2017-ல் நடத்த மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று கூறிய நீதிபதி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அரசாணை எதுவும் வெளியிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். 

அத்துடன், அரசாணை வெளியிடப்படாமல் இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் ஆகாதா? என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் அரசாணை தொடர்பாக அரசிடம்  விளக்கம் பெற்று பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், இந்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜனவரி 12-ம் தேதியே அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. எந்தெந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. இன்றைய விசாரணையின்போது அரசாணை தாக்கல் செய்யப்படாததால், ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் அரசாணை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அரசாணையை ஆய்வு செய்த நீதிபதி, உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தார். வரும் 22-ம் தேதி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார்.  #Jallikattu # Ulagampatti #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com