

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றனர். ஆனால் நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாளை பிற்பல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, தனது கட்சிக்காரர் நிர்மலா தேவிக்கு உரிய சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
நாளை இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirmalaDevi #HighCourtMaduraiBench