

மதுரை:
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இது சட்ட விரோதமாகும். எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 19-ந்தேதி புகார் மனு அனுப்பினேன். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே கவர்னரின் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது புகார் மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இங்கு இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.