சசிகலா புஷ்பா எம்.பி. திருமணத்துக்கு மதுரை கோர்ட்டு இடைக்கால தடை
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, வக்கீல். இவருக்கும், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த திருப்பதி மகள் சத்ய பிரியாவுக்கும் 2014-ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும், வக்கீல் ராமசாமிக்கும் வருகிற 26-ந் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியானது.
இதையறிந்த சத்ய பிரியா அதிர்ச்சியடைந்தார். அவர் மதுரை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், ராமசாமிக்கும் 2014-ல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக நான் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.
எனது கணவருக்கும், சசிகலா புஷ்பா எம்.பி.க்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்தியை பார்த்தேன். இந்த சட்ட விரோத திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வெங்கடவரதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அவர் வக்கீல் ராமசாமி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்தார். #Tamilnews

