

சென்னை:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கமாக இன்று மாலை 5.45 மணிக்கு திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். இதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.
இதேபோல், சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருவிழாவை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையடுத்து, பெசன்ட்நகர் செல்லும் வழித்தடங்களில் திருவிழாவை காண குவிந்த பக்தர்களால் தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.