கொடைக்கானலில் நிலவும் கடும் உறை பனி

கொடைக்கானலில் கடும் உறை பனி நிலவி வருகிறது.
கொடைக்கானலில் நிலவும் கடும் உறை பனி
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் இதமான தட்ப வெப்பத்தை அனுபவிக்க வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் எங்கும் பசுமையாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை இல்லாமல் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாகவே குளிர் காற்றுடன் கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் புல்வெளிகள் அனைத்தும் பனிப்படலமாக காட்சி அளிக்கிறது. தண்ணீரும் பனிக்கட்டியாக உறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குளிரிலும் அதிகரித்து வருகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மேலும் அதிக அளவு பனிப்பொழிவு உள்ளதால் வெளிநாட்டில் இருப்பதுபோல் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட வந்த எங்களுக்கு இந்த இயற்கை சூழல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com