கஜா புயலால் கடும் பாதிப்பு- நிவாரணம் வழங்க கோரி நாகை மீனவ கிராம மக்கள் மறியல்

கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நாகை மாவட்ட மீனவ கிராம மக்கள் நிவாரணம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
கஜா புயலால் கடும் பாதிப்பு- நிவாரணம் வழங்க கோரி நாகை மீனவ கிராம மக்கள் மறியல்
Published on

நாகப்பட்டினம்:

கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புயலால் படகுகள் சேதமாகி வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு பால்பண்ணை சேரி பகுதியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முகாமில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் திடீரென நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பால்பண்ணை சேரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

நேற்று முன்தினம் கஜா புயலால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். இங்கு வந்து அதிகாரிகள், எங்களுக்கு குறைகளை கேட்பது இல்லை. புயலால் வீடுகள், படகுகள் சேதமாகி உள்ளது. தமிழக அரசு அதிகாரிகள், சேத விவரங்களை கணக்கெடுக்காமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முன்வராமல் உள்ளனர். இதை கண்டித்து மறியல் செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone

X

Maalai Malar
www.maalaimalar.com