தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வம்பாகீரப்பாளையத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக மீனவர்கள் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

துறைமுக முகத்துவாரம் அடிக்கடி மணல் சேர்ந்து அடைத்து கொள்ளும். இதனால் மீனவர்களின் படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தரை தட்டி சேதமடையும். சமீபத்திலும் முகத்துவாரம் முழுமையாக மணல் சேர்ந்து அடைத்து கொண்டது.

இதனால் விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. படகு உள்ளிட்ட படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த 10-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. முகத்துவாரத்தை தூர்வாரி கடல்புறத்தின் இருபுறமும் கற்களை கொட்ட வேண்டும். 10 மீட்டர் ஆழப்படுத்த வேண்டும். நிரந்தரமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன்படி இன்று தலைமை தபால்நிலையம் முன்பு 18 கிராம மீனவர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இதில் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், மீன் ஏற்றும் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் விற்கும் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com