உனத்கட் தேசிய அணியில் இடம் பிடித்திருக்கனும்: முன்னாள் வீரர் சொல்கிறார்

ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பந்து வீசி 67 விக்கெட்டுகள் சாய்த்த உனத்கட் தேசிய அணியில் இடம் பிடித்திருக்கனும் என முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
ஜெய்தேவ் உனத்கட்
ஜெய்தேவ் உனத்கட்
Published on

இந்திய டெஸ்ட் அணியில் 2010-ம் ஆண்டு தனது 18 வயதில் அறிமுகம் ஆனவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட். அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம் பிடிக்கவில்லை.

ஆனால் 2019-2020 சீசனில் உனத்கட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் இந்த சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த சீசனில் அஷுடோஷ் அமன் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ரஞ்சி டிராபியில் ஒரு சீசனில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக உள்ளது.

இவரது தலைமையில்தான் சவுராஷ்டிரா அணி முதல்முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 28 வயதில் சிறப்பாக விளையாடி வரும் உனத்கட் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கனும் என முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில் ‘‘உனத்கட் மீண்டும் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டிருக்கனும். அவரால் பந்தை இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் செய்ய முடியும். தொடர்ச்சியாக ஒரு பகுதியில் பந்தை பிட்ச் செய்கிறார்.

அவரது உடற்குதி மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளார். தற்போது அவரால் நீண்ட ஸ்பெல் பந்து வீச முடியும். புதுப்பந்தையும் கையாளத்தெரியும். அதேபோல் பழைய பந்தையும் கையாளத் தெரிந்து வைத்துள்ளார். ஆகவே, இவரை எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்திய அணியில் உள்ள அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் வலது கை பந்து வீச்சாளர்கள். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் மாறுபட்ட ஆப்சனை வழங்குவார். இடது கை மற்றும் வலது கை பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை நிலையாக நின்று விளையாடாமல் பார்த்துக் கொள்ள முடியும்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com