

பொள்ளாச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறியதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாக கூறினார்.
இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும், சிபிசிஐடி விசாரணை தொடர்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், நக்கீரன் கோபால் நாளைக்குப் பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக அனுமதி அளித்தனர்.