தினகரன் கட்சியில் எந்த குழப்பத்தை உருவாக்கவில்லை: அரூர் எம்.எல்.ஏ. முருகன்

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கட்சியில் எந்த குழப்பத்தை ஏற்படுத்தவில்லை என்று தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஆர். முருகன் கூறினார்.
தினகரன் கட்சியில் எந்த குழப்பத்தை உருவாக்கவில்லை: அரூர் எம்.எல்.ஏ. முருகன்
Published on

சேலம்:

தினகரனின் ஆதரவாளரும், தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஆர். முருகன் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- தினகரன் அறிவித்த மகளிர் அணி செயலாளர் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்று பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா அறிவித்துள்ளார். நீங்கள் இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- புதிய பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

கே:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து வரும்போது குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் திவாகரன் மற்றும் தினகரன் தலைமையிலும் செயல்படுவது ஆட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தாதா?

ப:- அப்படி ஒன்றும் இல்லை, அண்ணன் எடப்படி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அவரது ஆட்சி நன்றாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்.

அந்த ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் எதுவும் கிடையாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். கட்டுக்கோப்புடன் உள்ள கட்சியை வலுப்படுத்தும் பணியில் தினகரன் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து மீண்டும் கட்சியை ஒரு பலம் உள்ள கட்சியாக மாற்றும் நடவடிக்கையை அவர் எடுக்க உள்ளார்.

அவர் கட்சியை பார்த்துக் கொள்வார், அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பார்த்துக் கொள்வார். கட்சிக்கும் ஆட்சிக்கும் முடிச்சு போடக்கூடாது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற ஆட்சி வேண்டும் என்பதை எம்.எல்.ஏ.க்களான நாங்கள் கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கே:- திவாகரனுக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ.க்களும், தினகரனுக்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இவர்கள் நினைத்தால் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் உள்ளதே?

ப:- அப்படி எல்லாம் கிடையாது. ஆட்சி கவிழாது, கவிழ்க்கவும் மாட்டோம். எங்களுடைய ஒரே நோக்கம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கட்சி எப்படி வலுவாக இருந்ததோ? அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணன் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அவருடைய சுற்றுப்பயணம் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும். அவர் (தினகரன்) கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் பொறுப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறார். இதில் எந்தவித அரசியல் குழப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com